செய்திகள்

நிலவும் குளு குளு சீசன்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2016-10-23 10:33 GMT   |   Update On 2016-10-23 10:33 GMT
கொடைக்கானலில் இதமான சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் இதமான சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வரும். இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவார்கள்.

கடந்த வாரம் வறட்சியில் இருந்த கொடைக்கானலில் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்த வண்ணம் இருந்ததால் குளிர் அதிகரித்தது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. மேலும் வந்த சுற்றுலா பயணிகளும் அறைகளிலேயே முடங்கி கிடந்தனர்.

இன்று காலை முதல் இதமான சூழல் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. லேசான சாரல் மழையுடன் இதமான காற்று தழுவி செல்வதால் இதனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர்.

இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் பாயிண்ட், தூண்பாறை, குணாகுகை, கோக்கர்ஸ் வாக் ஆகிய பகுதிகளை சுற்றிப் பார்த்தனர். மேலும் நகரின் மையத்தில் உள்ள பிரையண்ட் பூங்கா மற்றும் ஏரிச்சாலையில் உள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்தனர்.

ஏரியைச் சுற்றி சைக்கிள் மற்றும் குதிரைகளில் ஆனந்தமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், கைடுகள், டாக்சி டிரைவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Similar News