செய்திகள்

புழல் ஜெயிலில் கைதிகள் உண்ணாவிரதம் வாபஸ்

Published On 2016-10-23 08:26 GMT   |   Update On 2016-10-23 08:26 GMT
சிறை சூப்பிரண்டு அன்பழகன் நேற்று இரவு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 12 பேரிடமும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் கைதிகள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
செங்குன்றம்:

அம்பத்தூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அபுதா கீர், ஜாவுர், சலீம், சபி யுல்லா உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு பூந்தமல்லி கோர்ட்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரியும் குற்றவாளிகள் 12 பேரும் புழல் ஜெயிலில் கடந்த 21-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தனர். 2 நாட்களாக அவர்களது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.

இதைத் தொடர்ந்து சிறை சூப்பிரண்டு அன்பழகன் நேற்று இரவு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 12 பேரிடமும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கோரிக்கைகள் குறித்து சிறைத்துறை தலைவருக்கு பரிந்துரை செய்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதனை ஏற்று கைதிகள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டனர். நேற்று இரவே உணவு சாப்பிட்டனர்.

கைதிகளிண் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்ததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Similar News