வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் ‘சஸ்பெண்டு’ கலெக்டர் நடவடிக்கை
மதுரை:
மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் தீபாவளிக்காக பட்டாசு கடை வைக்க ஏற்பாடு செய்து வந்தார். இதற்காக முறையாக போலீஸ், தீயணைப்புத் துறை, மாவட்ட வருவாய் துறையில் அனுமதி பெற விண்ணப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் அனுமதி பெற முயன்றபோது சுப்புராஜூவிடம், மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளரான அன்புசெல்வன் (வயது40) ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத சுப்புராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து ரசாயன பவுடர் கலந்த பணத்தை சுப்புராஜ், நேர்முக உதவியாளர் அன்பு செல்வத்திடம் கொடுத்தார். அந்த பணத்தை அன்புசெல்வன் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்புசெல்வத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அன்பு செல்வனை கலெக்டர் வீரராகவராவ் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.