திருத்தணி அ.தி.மு.க. கவுன்சிலர் கொலையில் மேலும் 2 பேர் சிக்கினர்
பள்ளிப்பட்டு:
திருத்தணி நகராட்சி 13-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகம். திருவள்ளூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
கடந்த 9-ந் தேதி காரில் சென்ற அவரை மர்ம கும்பல் வழிமறித்து மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டி கொன்றனர்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஜாகீர்உசேன், பிரேம்குமார், ராஜேஷ்குமார், சின்னச்சாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆறுமுகம் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே தலைமறைவான முக்கிய குற்றவாளி பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். அவர் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும்.