செய்திகள்
வினோத்

மீஞ்சூர் அருகே எலும்புக்கூடு மீட்பு: கஞ்சா விற்கும் தகராறில் வாலிபர் கடத்தி கொலை

Published On 2016-10-05 07:12 GMT   |   Update On 2016-10-05 07:12 GMT
மீஞ்சூர் அருகே கஞ்சா விற்கும் தகராறில் வாலிபரை கடத்தி கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொன்னேரி:

மீஞ்சூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வினோத் (வயது 21). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி.

கடந்த மாதம் 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற வினோத் திரும்பி வரவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை நாலூர் அருகே தண்டவாள பகுதியில் உள்ள முட்புதரில் மனித எலும்புக்கூடு கிடந்தது. மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் தனித்தனியாக இருந்தன.

அதில் இருந்த ஆடைகளை வைத்து இறந்துபோனது வினோத் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். அவரது பெற்றோரும் அடையாளம் காட்டினர்.

விசாரணையில் வினோத்தை அவரது நண்பர்கள் ஆட்டோவில் கடத்தி சென்று கொலை செய்தது தெரிந்தது.

இது தொடர்பாக அவரது நண்பர்கள் மேலூர், நாலூர், ஏரிக்கரை, அத்திப்பட்டு, பள்ளம் பகுதியை சேர்ந்த 11 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கொலையுண்ட வினோத்துக்கு கஞ்சா விற்பனை செய்யும் அனுப்பம்பட்டை சேர்ந்த ஜவகர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த மாதம் கஞ்சா விற்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே மோதல் உருவானது. இந்த தகராறில் வினோத்தை கடத்தி கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

ரவுடி ஜவகர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் சிக்கினால் தான் கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்த முழுவிவரமும் தெரியவரும்.

Similar News