செய்திகள்

திருப்பூரில் உடலில் மின்சாரம் பாய்ச்சி தொழில் அதிபர் தற்கொலை: வங்கி அதிகாரிகள் மீது புகார்

Published On 2016-09-30 08:20 GMT   |   Update On 2016-09-30 08:20 GMT
திருப்பூரில் உடலில் மின்சாரம் பாய்ச்சி தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து, போலீசார் ராம்கணேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் அடுத்துள்ள பூலுவப்பட்டி தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் ராம்கணேஷ் (வயது27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஊத்துக்குளி அருகே உள்ள பள்ளகவுண்டம்பாளையத்தில் பனியன் கழிவுகளில் இருந்து பஞ்சு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் 9 பேர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

ராம்கணேஷ் திருப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.28 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இன்னும் அவர் ரூ.7 லட்சம் கடன் கட்ட வேண்டி இருந்தது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை ராம்கணேஷ் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வங்கியில் இருந்து அதிகாரிகள் வந்து ஏன் கடன் தவணையை கட்டவில்லை என்று ராம்கணேசிடம் விசாரித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ராம்கணேஷ் பள்ளகவுண்டம்பாளையத்தில் உள்ள தனது நிறுவனத்தில் வைத்து காலில் மின்சார வயர்களை சுற்றிக்கொண்டு மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராம்கணேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராம்கணேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு ஆங்கிலத்தில் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் நான் வங்கியில் கடன் செலுத்த கால அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால் அதற்கு வங்கி அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசினார்கள். எனது செல்போனிலும் பேசி தொந்தரவு கொடுத்தார்கள். இதனால் மன உளைச்சல் அடைந்த நான் வேறு வழியின்றி தற்கொலை முடிவை எடுக்கிறேன். வங்கி அதிகாரிகளின் கெடுபிடியால் எனது முடிவுபோல் நாளை உங்களுக்கும் வரலாம் என்று எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தை ஊத்துக்குளி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News