செய்திகள்

செஞ்சியில் விநாயகர் சிலைக்கு தீவைப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2016-09-09 17:57 GMT   |   Update On 2016-09-09 17:57 GMT
செஞ்சியில் விநாயகர் சிலைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொட்டகை முழுவதும் பரவியது.

செஞ்சி:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செஞ்சியில் சிங்கவரம் கொத்தமங்கலம் சாலை சந்திப்பில் இந்து மக்கள் கட்சி சார்பில் கொட்டகை அமைத்து விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் அருள்வாக்கு பேரவை மாநில அமைப்பாளர் திருமுருகன் ஏற்பாட்டில் தினமும் வழிபாடு நடந்து வந்தது.

நேற்று இரவு கொட்டகையில் திருமுருகன் தலைமையில் மைக்செட் போடப்பட்டு வழிபாடு நடந்தது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வழிபாடு முடிந்தவுடன் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். அந்த நேரத்தில் கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். தீ மளமளவென எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொட்டகை முழுவதும் பரவியது. அங்கு இருந்த பொருட்கள், விநாயகர் சிலை முழுவதும் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து திருமுருகன் செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு செஞ்சி சிங்கவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம் கொட்டகைக்கு தீவைத்த மர்ம நபர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News