செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக 50 வாக்குச்சாவடிகள் - கலெக்டர் தகவல்

Published On 2016-09-08 09:27 GMT   |   Update On 2016-09-08 09:27 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி நகர்புற உள்ளாட்சிகளான தூத்துக்குடி மாநகராட்சிக்கு 254 வாக்குச்சாவடிகளும், கோவில்பட்டி நகராட்சிக்கு 78 வாக்குச்சாவடிகளும், காயல்பட்டினம் நகராட்சிக்கு 38 வாக்குச்சாவடிகளும், 19 பேரூராட்சிகளுக்கு மொத்தம் 312 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சிகளான 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1,775 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலை விட தூத்துக்குடி மாநகராட்சியில் 4 வாக்குச்சாவடிகளும், கோவில்பட்டி நகராட்சியில் 11 வாக்குச்சாவடிகளும், காயல்பட்டினம் நகராட்சியில் ஒரு வாக்குச்சாவடியும், திருச்செந்தூர் பேரூராட்சியில் 5 வாக்குச்சாவடிகளும், ஆறுமுகநேரி பேரூராட்சியில் 2 வாக்குச்சாவடிகளும், விளாத்திகுளம் பேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடியும் ஆக மொத்தம் 24 வாக்குச்சாவடிகளும், ஊராட்சி ஒன்றியங்களில் 26 வாக்குச்சாவடிகளும் கூடுதலாக அமைக்கப் படுகின்றன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளன.

வாக்குச்சாவடி வரைவு பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு, வாக்குச்சாவடிகள் தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்

Similar News