செய்திகள்

திருவண்ணாமலை அருகே விநாயகர் சிலையை குளத்தில் கரைத்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

Published On 2016-09-08 05:05 GMT   |   Update On 2016-09-08 05:05 GMT
திருவண்ணாமலை அருகே விநாயகர் சிலையை குளத்தில் கரைக்க முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு சே.அகரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 40). விவசாயி. இவரது மனைவி பூங்கொடி (32). இவர்களுக்கு சிவப்பிரியா (14) என்ற மகளும், அசோக் (10) என்ற மகனும் இருந்தனர்.

அசோக், அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். விநாயகர் சதுர்த்தியையொட்டி, ராமலிங்கம் சிறிய விநாயகர் சிலையை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்தார். நேற்று மாலை விஜர்சனம் செய்வதற்காக விநாயகர் சிலையை மகன் அசோக்கிடம் கொடுத்து அனுப்பினார்.

அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கரைப்பதற்காக சிலையை தூக்கிக் கொண்டு அசோக் சென்றான். குளத்தில் சிலையை கரைத்தபோது, அசோக் தண்ணீரில் தவறி விழுந்தான். நீச்சல் தெரியாததால், தண்ணீரில் தத்தளித்த அசோக் மூழ்கி இறந்தான்.

அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் அசோக்கை காப்பாற்ற முடியவில்லை. மகன் சென்று நீண்ட நேரமானதால் ராமலிங்கம் குளத்திற்கு தேடி சென்றார். அப்போது, குளத்தில் மகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.

இதுகுறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அசோக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News