செய்திகள்

காசிமேட்டில் ஓடஓட விரட்டி வாலிபர் படுகொலை: நண்பர்கள் 2 பேருக்கு வெட்டு

Published On 2016-09-07 05:42 GMT   |   Update On 2016-09-07 05:42 GMT
காசிமேட்டில் ஓடஓட விரட்டி வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரம்:

சென்னை காசிமேடு புதுமணிக்குப்பத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (22). இவர் நேற்று இரவு 10.30 மணி அளவில், தனது நண்பர்களான சக்திவேல் (24), விக்னேஷ் (25) ஆகியோருடன் அதே பகுதியில் காசிபுரம் ஏ.பிளாக்கில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர்களை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. இதனால் பயந்து போன லோகேஸ்வரன், சக்திவேல், விக்னேஷ் ஆகியோர் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் அக்கும்பல் கொலை வெறியுடன் 3 பேரையும் விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் லோகேஸ்வரனுக்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து அவர் பலியானார்.

சக்திவேல், விக்னேஷ்வரன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விக்னேஷ் உயிர் பிழைப்பதற்காக அந்த வழியாக வந்த மாநகர பஸ்சில் வெட்டுக் காயத்துடன் ஏறி தப்பிச் சென்றார்.

பின்னர் அவரை பஸ்சில் இருந்தவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். உயிருக்கு போராடிய சக்திவேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பிய சக்திவேல் பிரபல ரவுடி பாக்சர் வடிவேலுவின் மகன் என்பது தெரிய வந்தது. இவரை கொலை செய்யவே குறிவைத்துள்ளனர். இதில் சிக்கி அவரது நண்பரான லோகேஸ்வரன் பலியாகி விட்டார்.

புழல் சிறையில் இருக்கும், சக்திவேலன் அண்ணன் வெற்றிவேலுக்கும் ரவுடி ஒருவனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே, சக்திவேலை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

Similar News