செய்திகள்

ஆரணி அருகே மின்சாரம் தாக்கி பள்ளிக்கு சென்ற அண்ணன்-தம்பி பலி

Published On 2016-06-21 05:19 GMT   |   Update On 2016-06-21 05:19 GMT
ஆரணி அருகே பள்ளிக்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அண்ணன், தம்பி மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
ஆரணி:

ஆரணி அருகே உள்ள களம்பூர் குமாரசாமி காலனியை சேர்ந்தவர் வேலு. அரிசி ஆலை தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு சந்தோஷ் (வயது9), நிவேத் (7) என்ற 2 மகன்கள் இருந்தனர். சந்தோஷ், களம்பூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். தம்பி நிவேத் அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இருவரும் களம்பூர் அரசு ஆஸ்பத்திரி பின்புறத்தில் உள்ள குறுக்கு பாதை வழியாக பள்ளிக்கு நடந்து செல்வார்கள். வழக்கம்போல் இன்று காலையில் சந்தோஷ், நிவேத் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். குறுக்கு பாதை வழியாக சென்றபோது அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை அவர்கள் கவனிக்கவில்லை.

எதிர்பாராமல் மின்கம்பியை மிதித்ததில் சந்தோசும், நிவேத்தும் தூக்கி வீசப்பட்டனர். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கத்தி கூச்சலிட்டதால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். மின்சாரம் பாய்ந்த 2 பேரையும் மீட்டு களம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.



மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் மின்சாரம் பாய்ந்த சந்தோஷ், நிவேத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மின்கம்பி அறுந்து கிடக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Similar News