செய்திகள்

உலகிற்கே சோறு போட்ட தமிழனை இலவச அரிசி வழங்கி கையேந்த வைத்துவிட்டனர்: சீமான் பேச்சு

Published On 2016-05-02 12:44 GMT   |   Update On 2016-05-02 12:44 GMT
உலகிற்கே சோறு போட்ட தமிழனை இலவச அரிசி வழங்கி கையேந்த வைத்துவிட்டனர் என கரூர் வெங்கமேட்டில் சீமான் பேசினார்.

கரூர்:

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கரூர் வெங்கமேட்டில் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழனுக்கு என்று ஒரு கட்சி இல்லை. உலகில் யாரையும் அடிமையாக்கி தமிழன் வாழ்ந்தது இல்லை. ஆனால் நம்மை அடிமையாக்கி உள்ளனர். அறத்தின் வழி நின்று ஆட்சி செய்தவன் தமிழன். திருவள்ளுவர் போன்று அறிவில் சிறந்தவர் உலகில் யாரும் இல்லை.

நம் தாய்மொழி தமிழ் இல்லை என்றால் உலகில் எவருக்கும் மொழி இல்லை. நாம் யார் என்று தெரிந்து கொண்டு தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டும்.

நம் உரிமையை பெறத்தான் அரசியல். அ.தி.மு.க., தி.மு.க. 50 ஆண்டு காலம் ஆட்சியில் செய்த சாதனை என்ன? சாதித்தது என்ன? இலவச அரிசி வழங்கியது தான் சாதனை. உலகிற்கே சோறு போட்ட தமிழனுக்கு இலவச அரிசி வழங்கி கையேந்த வைத்து விட்டார்கள்.

கல்வி வியாபாரம் ஆகி விட்டது. எல்லா வளத்தையும் விற்று விட்டார்கள். ஒரு கார் தயாரிக்க 4½ லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

கார் இல்லை என்றால் புரட்சி ஏற்படாது. ஆனால் சோறு, நீர் இல்லை என்றால் புரட்சி ஏற்படும். இந்த ஆபத்தான நிலையில் உள்ளோம். நம் மண்ணை அந்நியன் அள்ளி சென்று விடக்கூடாது என்று நம் முன்னோர்கள் பாடுபட்டனர். ஆனால் தற்போது இருக்கிற ஆற்றை கொன்று விட்டார்கள்.

மணல் அள்ளாதே என்று போராடுபவன் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. எனவே தற்போது இருப்பதை காப்பாற்ற வேண்டும். தமிழன் நாதியற்று போய் விட்டான். நமக்கு பின்னால் வரும் நம் தமிழன் மானத்தோடு வாழ வேண்டும். உறுதியாக அதிகாரம் பெறுவோம். நாம் தமிழர் கட்சி அரசு அமையும். அன்று மாற்றிக்காட்டுவோம். அப்போது வேலை இல்லை என்ற பேச்சுக்கும், பசி என்ற பேச்சுக்கும் இடம் இருக்காது. உங்கள் வாக்கை தாருங்கள். மிக சிறந்த வாழ்க்கையை தருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News