விளையாட்டு
தினேஷ் கார்த்திக்

விஜய் ஹசாரே டிராபி - பெங்காலை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது தமிழக அணி

Published On 2021-12-12 00:18 GMT   |   Update On 2021-12-12 00:18 GMT
விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முந்தைய ஆட்டங்களில் தமிழகம் அணி மும்பை மற்றும் கர்நாடகா அணிகளை அடுத்தடுத்து சாய்த்து இருந்தது.
திருவனந்தபுரம்:

20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் உள்பட 7 நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் எலைட் பி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி, திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் பெங்காலை சந்தித்தது.

முதலில் பேட் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 295 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் 87 ரன்னும், பாபா இந்திரஜித் 64 ரன்னும், ஜெ.கவுசிக் 50 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

கடைசி கட்டத்தில் ஷாருக்கான் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 32 ரன்கள் விளாசினார்.

பெங்கால் சார்பில் முகேஷ் குமார், ஆகாஷ் தீப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 296 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் பெங்கால் அணி களம் இறங்கியது. ஆனால், பெங்கால் அணி 39.1 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தமிழக அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.

தமிழகம் சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், சித்தார்த், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தமிழக அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.
Tags:    

Similar News