ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை
ஐதராபாத்:
‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் ரெய்னா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்த சீசனில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்குக்கு ஒரு அணி முன்னுரிமை கொடுப்பது இது 4-வது முறையாகும்.
இதன்படி ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். வலுவான அடித்தளம் அமைத்து தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் (9.5 ஓவர்) திரட்டினர். இதில் பிளிஸ்சிஸ் அடித்த ஒரு சிக்சர் தொடரின் 400-வது சிக்சராக பதிவானது. வாட்சன் 31 ரன்களில் கிளன் போல்டு ஆனார்.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அம்பத்தி ராயுடு 25 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டும், நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் பின்னியெடுத்தார். 24 பந்துகளில் தனது 41-வது அரைசதத்தை எட்டிய அவர் 50 ரன்களில் (25 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் (3 ரன்), விஜய் சங்கர் (7 ரன்), தீபக் ஹூடா (13 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் அதனால் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 61 ரன்களுடன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். 9-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஐதராபாத் அணிக்கு 4-வது வெற்றியாகும்.