செய்திகள்

2வது டி20 - அயர்லாந்து அணிக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2018-06-29 16:48 GMT   |   Update On 2018-06-29 16:49 GMT
அயர்லாந்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. #IREvIND #INDvIRE

அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.



ராகுல் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். கோலி 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 

அதிரடியாக விளையாடிய ராகுல் 36 பந்தில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். ராகுல் - ரெய்னா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மா டக்-அவுட் ஆனார். சிறிது நேரத்தில் சுரேஷ் ரெய்னா 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.



அதன்பின் மணிஷ் பாண்டே - ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தனர். கடைசி ஓவரில் பாண்டியா அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் கெவின் ஓ பிரையன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 214 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. #IREvIND #INDvIRE
Tags:    

Similar News