செய்திகள்
அணியை வெற்றி பெற வைத்த சண்டிமல், திசாரா பேரேரா

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை

Published On 2018-01-21 15:00 GMT   |   Update On 2018-01-21 15:00 GMT
வங்காள தேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை. #SLvZIM #ThisaraPerera
வங்காள தேசத்தில் வங்காள தேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

கடந்த 15-ம்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வேயை வங்காள தேசம் வீழ்த்தியது. 17-ந்தேதி நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி பெற்றிருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற பேட்டியில் இலங்கையை வங்காள தேசம் வீ்ழ்த்தியது.

இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மீண்டும் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் திசாரா பேரேரா, பெர்னாண்டோ ஆகியோரின் நேர்த்தியான பந்து வீச்சால் ஜிம்பாப்வே அணி 44 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 198 ரன்னில் சுருண்டது. பெரேரா 4 விக்கெட்டும், பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஜிம்பாப்வே அணி சார்பில் டெய்லர் 58 ரன்னும், கிரிமீயர் 34 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் குசால் பேரேரா 49 ரன்களும், 3-வது வீரராக களம் இறங்கிய மெண்டிஸ் 36 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி வெற்றியை நோக்கிச் சென்ற நேரத்தில் அடுத்தத்து விக்கெட்டுக்களை இழக்க 34.4 ஓவரில் 145 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் 6-வது விக்கெட்டுக்கு சண்டிமல் உடன் திசாரா பெரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 44.5 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சண்டிமல் 38 ரன்களுடனும், பெரேரா 39 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 39 ரன்கள் அடித்த திசாரா பேரேரா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.


போல்டாகிய உபுல் தரங்கா

தற்போது வரை வங்காள தேசம் 2 போட்டியில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மூன்று போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. ரன்ரேட் மூலம் ஜிம்பாப்வே 2-வது இடத்தில் உள்ளது. இலங்கை கடைசி இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் வங்காள தேசத்துடன் விளையாட வேண்டியுள்ளது. வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு நுழையும். இல்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு நுழைய வேண்டிய நிலை ஏற்படும்.
Tags:    

Similar News