செய்திகள்

வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக சுனில் ஜோஷி நியமனம்

Published On 2017-08-22 12:14 GMT   |   Update On 2017-08-22 12:14 GMT
ஆஸ்திரேலியா தொடருக்கான வங்காளதேச அணியில் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 27-ந்தேதி தொடங்குகிறது. வங்காளதேச அணி தனது சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என சமநிலைப்படுத்தி அசத்தியது.

ஆஸ்திரேலியாவை சுழற்பந்து வீச்சு மூலம் திணறடிக்க வங்காள தேசம் முயற்சிக்கும். இதற்கேற்ற வகையில்தான் ஆடுகளம் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுழற்பந்து வீச்சை வலுப்படுத்துவதற்கான இந்த தொடருக்காக மட்டும், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷியை ஒப்பந்தம் செய்துள்ளது.



‘‘சுனில் ஜோஷி விரைவில் டாக்கா வந்தடைவார். முதல் டெஸ்டிற்கான ஆயத்தப்பணிகள் தொடங்க இருக்கிறது. வங்காளதேச அணி சுழற்பந்து வீச்சு ஆலோசகரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. எங்களுடைய சப்போர்ட் அதிகாரியுடன் சுனில் ஜோஷி இணைந்து அணியின் பலத்தை வலுப்படுத்துவார்’’ என்று வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் ஜோஷி இந்திய அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 69 ஒருநாள் போட்டியில் 69 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
Tags:    

Similar News