செய்திகள்

டி.என்.பி.எல். குவாலிபையர்-1: தூத்துக்குடிக்கு 115 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2017-08-15 15:36 GMT   |   Update On 2017-08-15 15:36 GMT
தமிழ்நாடு பிரிமீயர் லீக் குவாலிபையர் 1-ல் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் வெற்றிக்கு 115 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கோபிநாத், தலைவன் சற்குணம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரை அதியசராஜ் டேவிட்சன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில் கோபிநாத் ஆட்டம் இழந்தார். 4-வது ஓவரை அதிசயராஜ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தலைவன் சற்குணம் ஆட்டம் இழந்தார். முதல் இரண்டு விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்ததால் சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணி ரன்கள் குவிக்க திணறியது.

3-வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் கார்த்திக் 26 பந்தில் 33 ரன்கள் குவிக்க, அடுத்து வந்த சத்தியமூர்த்தி சரவணன் 7 ரன்னிலும், சசிதேவ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆல்ரவுண்டர் அந்தோணி தாஸ் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த வேளையில் மீண்டும் அதிசயராஜ் பந்து வீச அழைக்கப்பட்டார். 17 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன்கள் குவித்திருந்த அந்தோணி தாஸை வீழ்த்திய அதிசயராஜ், அடுத்து வந்த சதீஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழக்கச் செய்தார். நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ரன்வேட்டைக்கு ஒரேயடியாக முட்டுக்கட்டை போட்டார்.

இறுதியாக வந்த யோ மகேஷ் 9 ரன்னிலும், சாய் கிஷோர் 1 ரன்னிலும், அலெக்சாண்டர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சரியாக 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News