செய்திகள்
பிராண்ட் '7’: முதல் கடையை ராஞ்சியில் தொடங்கி வைத்தார் தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனக்கு சொந்தமான பிராண்ட் ‘7’ உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கடையை ராஞ்சியில் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
ராஞ்சி:
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை சென்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தற்போது தனது சொந்த காரியங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தனக்கு சொந்தமான முதல் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கடையை பிராண்ட் ‘7’ என்னும் பெயரில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று தொடங்கி வைத்துள்ளார். நேற்று நடைபெற்ற துவக்க விழாவில் தோனி மற்றும் அவர் அங்கம் வகிக்கும் ரித்தி ஸ்போர்ட்ஸ்சின் உரிமையாளரான அருண் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். துவக்க விழாவின் போது எடுத்துகொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி பதிவிட்டுள்ளார்.
இந்த கடைக்கான பெயர் தோனியில் ராசியான எண்ணான ‘7’ ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவே அவரது பிறந்த தேதி, மாதம் மற்றும் இந்திய அணியில் அவரது ஜெர்ஸ்சி எண் ஆகும். கடை திறந்து வைத்த தோனி பொது மக்கள் அனைவரும் தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி நிலையத்தில் செலவிடுமாறு கூறினார். மேலும் வருகிற 2020-ம் ஆண்டிற்குள் இதுபோன்ற 275 கடைகளை வெவ்வேறு நகரங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.