செய்திகள்

ஸ்டட்கார்ட் ஓபன்: 15 மாத தடை முடிந்து களம் இறங்கிய ஷரபோவா முதல் போட்டியிலேயே வெற்றி

Published On 2017-04-27 12:34 GMT   |   Update On 2017-04-27 12:35 GMT
ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் 15 மாதம் தடைபெற்ற மரியா ஷரபோவா, தடைக்காலம் முடிந்து நேற்று களமிறங்கினார். தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தினார்.
ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. டென்னிஸ் விளையாட்டைக் கடந்து விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக அவருக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் செரீனா வில்லியம்ஸிற்கு எதிராக தோல்வியடைந்த போட்டிக்குப் பிறகு களம் இறங்கவில்லை.

சுமார் 15 மாதங்கள் கழித்து தற்போது ஸ்டட்கார்ட் ஓபனில் களம் மிறங்கியுள்ளார். இந்த தொடரை நடத்துபவர்கள் ஷரபோவாவிற்கு ‘வைல்டுகார்டு’ அளித்தனர். இதற்கு கடும் விமர்சனம் எழும்பியது.

இந்நிலையில் வைல்டு கார்டு அனுமதியுடன் ஷரபோவா நேற்று முதல் சுற்று ஆட்டத்தில் வின்சியை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 7-5, 6-3 என வெற்றி பெற்று முத்திரை பதித்தார். 2-வது சுற்றில் சக நாட்டு வீராங்கனையான எகாடெரினா மகரோவாவை எதிர்கொள்கிறார். இவர் முன்னணி வீராங்கனை ரட்வன்ஸ்காவை 6-2, 6-4 என வீழ்த்தியவர்.

15 மாதங்களுக்குப் பிறகு களம் இறங்கிய போதிலும், முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது ஷரபோவாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

மரியா ஷரபோவா மே மாதம் 7-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடக்கும் மாட்ரிட் தொடரில் விளையாடுவதற்கும், மே 15-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை நடக்கும் ரோம் தொடரில் விளையாடுவதற்கும் ‘வைல்டுகார்டு’ பெற்றுள்ளார்.

Similar News