செய்திகள்

ஐ.பி.எல்.: புனே அணியின் வெற்றிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Published On 2017-04-22 12:24 GMT   |   Update On 2017-04-22 12:24 GMT
புனேவில் நடைபெற்று வரும் போட்டியில் ஹென்றிக்ஸின் அதிரடியால் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் வெற்றிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. புனேவில் 4 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.

புனே அணியில் 17 வயதே ஆன தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். ராகுல் சாகர் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் யுவராஜ் சிங் உடல்நலக்குறைவால் விளையாடவில்லை. அவருக்குப்பதிலாக பிபுல் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஐதராபாத் அணி 8.1 ஓவரில் 55 ரன்கள் எடுத்திருக்கும்போது தவான் 29 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 14 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

டேவிட் வார்னர் 40 பந்தில் 43 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். 4-வது வீரராக களம் இறங்கிய ஹென்றிக்ஸ் அதிரடியாக விளையாடி 28 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 55 ரன்கள் குவிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Similar News