செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் டிராவிட் ?

Published On 2017-03-12 11:08 GMT   |   Update On 2017-03-13 05:01 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு, தற்போதைய பயிற்சியாளர் அணில் கும்ளே அணியின் மேலாளராக பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் திகழ்ந்த ராகுல் டிராவிட் மற்றும் அணில் கும்ளே ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் அணியை முன்னேற்றுவதற்கான யோசனைகளை தெரிவித்து வந்தனர்.

கடந்த ஆண்டில் அணில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. மேலும், வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜிம்பாவே ஆகிய அணிகளுடனான டெஸ்ட் தொடரை வென்றது.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான  கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டும் சிறந்த பங்களிப்பை அணிக்கு அளித்துள்ளார். இந்நிலையில், அணியின் புதிய பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படலாம் எனவும், தற்போதைய பயிற்சியாளர் அணில் கும்ளே, அணியின் மேலாளராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான முடிவுகளை சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய பி.சி.சி.ஐ-யின் ஆலோசனைக் குழு இறுதி செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News