செய்திகள்

அகஸ்தியர்பட்டியில் அகில இந்திய கபடி போட்டி நாளை தொடங்குகிறது

Published On 2017-02-16 03:36 GMT   |   Update On 2017-02-16 03:36 GMT
64-வது அகில இந்திய தென் மண்டல கபடி போட்டியை விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டியில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் சிங்கை ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து 64-வது அகில இந்திய தென் மண்டல கபடி போட்டியை விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டியில் நடத்துகிறது. இந்த போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், கோப்பையும், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரமும், கோப்பையும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், கோப்பையும், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியை 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கபடி போட்டியையொட்டி கபடிக்கு என்று தனியாக அமைக்கப்பட்ட பாடல் சி.டி.வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக கோபால், நெல்லை மாவட்ட கபடி கழக செயலாளர் பகவதி பெருமாள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய இணைய தலைவர் சக்திவேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கணேசன், சிவந்திபுரம் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் பிராங்கிளின், பஞ்சாயத்து செயலாளர் ஸ்டீபன் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News