2.10 மீட்டர் உயரம் தாண்டுவதே எனது அடுத்த இலக்கு: மாரியப்பன் பேட்டி
மதுரை:
ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார். மதுரையில் இன்று தனியார் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்துகிறது. இதற்காக மாரியப்பன் மதுரை வந்தார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மராத்தான் நிகழ்ச்சியில் மாரியப்பன் கலந்து கொண்டார். மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், மராத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக தங்கமகன் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாய் நாட்டிற்காக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை பெருமையாக கருதுகிறேன். விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து முயற்சி செய்தால் சாதனை இலக்கை அடையலாம். 2.10 மீட்டர் உயரம் தாண்டுவதே எனது அடுத்த இலக்கு. அதற்காக முயற்சி எடுத்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.