செய்திகள்

2-வது டெஸ்ட்: தமீம் இக்பால் சதம் அடித்தும் 50 ரன்னுக்குள் 9 விக்கெட்டை இழந்து 220 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்

Published On 2016-10-28 10:56 GMT   |   Update On 2016-10-28 10:56 GMT
இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் தமீம் இக்பால் சதம் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், அதன்பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் வங்காள தேச அணி 220 ரன்னில் சுருண்டது.
வங்காள தேசம் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மிர்புரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற  வங்காள தேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இம்ருல் கெய்ஸ் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து தமீம் இக்பால் உடன் மொமினுல் ஹக்யூ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய தமீம் இக்பால் சதம் அடித்தார். அவர் 139 பந்தில் 12 பவுண்டரியுடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அப்போது வங்காள தேச அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்னாக இருந்தது. மறுமுனையில் விளையாடிய மொமினுல் ஹக்யூ 66 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வங்காள தேசத்தின் வி்க்கெட்டுக்கள் சீட்டுக்கட்டுப்போல் சரிந்தது.

மொயீன் அலி அபாரமாக விளையாடி வங்காள தேசத்தின் ரன் குவிப்புக்கு தடை போட்டார். இதனால் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 220 ரன்னில் சுருண்டது. வங்காள தேசம் கடைசி 50 ரன்னில் 9 விக்கெட்டுக்களை இழந்தது. மொயீன் அலி அபாரமாக பந்து வீசி 19.5 ஓவரில் 57 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 24 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Similar News