செய்திகள்

கான்பூர் டெஸ்ட்: முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 105/1 - ராகுல் 32 ரன்னில் அவுட்

Published On 2016-09-22 06:04 GMT   |   Update On 2016-09-22 06:05 GMT
இந்தியாவின் 500-வது டெஸ்ட் இன்று கான்பூரில் தொடங்கியது. முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் என்பதால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெள்ளி நாணயத்தால் டாஸ் சுண்டப்பட்டது. விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியா 6 பேட்ஸ்பேன்கள், இரண்டு வேகப்பந்து மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நியூசிலாந்து 3 சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், மிஸ்ரா இடம்பெறவில்லை.

தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அதன்பின் ராகுல் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். போல்ட் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் மீண்டும் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.

அடுத்த ஓவரில் முரளி விஜய் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் வீசிய 11-வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ராகுல், அந்த ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்தியா 42 ரன்கள் எடுத்திருந்தது.



2-வது விக்கெட்டுக்கு விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 31 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் சேர்த்துள்ளது. விஜய் 39 ரன்களுடனும், புஜாரா 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி, 2. முரளி விஜய், 3. லோகேஷ் ராகுல், 4. புஜாரா, 5. ரகானே, 6. ரோகித் சர்மா, 7. சகா, 8. அஸ்வின், 9. ஜடேஜா, 10. உமேஷ் யாதவ், 11. முகமது ஷமி.

நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. லாதம், 2. குப்தில், 3. வில்லியம்சன் (கேப்டன்), 4. டெய்லர், 5. ரோஞ்சி, 6. சான்ட்னெர், 7. வாட்லிங் (விக்கெட் கீப்பர்), 8. கிரேக், 9. வாக்னர், 10. போல்ட், 11. சோதி.

Similar News