இந்தியா

தமிழக அரசு பஸ்சை எரித்த 3 பேர் குற்றவாளிகள்: தண்டனை விபரம் ஆகஸ்டு 1-ந்தேதி அறிவிப்பு

Published On 2022-07-29 09:56 GMT   |   Update On 2022-07-29 09:56 GMT
  • சேலத்தில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு சென்ற தமிழக அரசு பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்து சிறைபிடித்தனர்.
  • வழக்கில் கைதான நசீர், சபீர் மற்றும் தாஜூதீன் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

திருவனந்தபுரம்:

கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 2005-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த அப்துல் நாசர் மதானி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது சேலத்தில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு சென்ற தமிழக அரசு பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்து சிறைபிடித்தனர்.

பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டனர். அதன்பிறகு அந்த கும்பல் பஸ்சுக்கு தீவைத்தனர். இதில் பஸ் முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க தொடங்கியது. கைதானவர்களையும் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கு கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது வழக்கில் கைதான நசீர், சபீர் மற்றும் தாஜூதீன் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

இவர்களுக்கான தண்டனை விபரம் ஆகஸ்டு 1-ந் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Similar News