இந்தியா

4 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ முயன்ற ஷாரிக்

Published On 2022-11-26 03:24 GMT   |   Update On 2022-11-26 03:24 GMT
  • ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.
  • 4 மாநிலங்களில் இருந்தும் தலா 50 பேர் முதல் 100 பேரை சேர்க்கவும் ஷாரிக் திட்டமிட்டுள்ளார்.

மங்களூரு:

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பயங்கரவாதி ஷாரிக்கின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் மங்களூருவில் கத்ரி கோவில் உள்பட 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஷாரிக்கின் செல்போனில் சர்ச்சைக்குரிய பேச்சாளர் ஜாகீர் நாயக்கின் பேசிய 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன. யூ-டியூப்பில் இருந்து அந்த வீடியோக்களை ஷாரிக் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துள்ளார். ஜாகீர் நாயக்கின் பேச்சு, அவரை பயங்கரவாத செயலில் ஈடுபட தூண்டுகோலாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் வெடிப்பொருட்களை வாங்கவும், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருக்கவும் 'டார்க்நெட்' என்ற இணையதளத்தை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் தங்களது இருப்பிடம், சுயவிவரங்கள் இந்த இணையதளத்தில் பதிவாகாது. இதனால் டார்க்நெட் இணையதளத்தை அவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும் ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கு சென்றுள்ளார். அங்குள்ள வனப்பகுதிக்கும் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ ஷாரிக் முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த 4 மாநிலங்களில் இருந்தும் தலா 50 பேர் முதல் 100 பேரை சேர்க்கவும் ஷாரிக் திட்டமிட்டுள்ளார். அவர்களுக்கு அந்தந்த மாநில வனப்பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு ஒரு மதத்தின் அமைப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது நாசவேலைகளை அரங்கேற்றவும், அந்த அமைப்பின் தலைவர்களை கொல்லவும் சதி திட்டம் தீட்டி உள்ளார்.

மேலும் தென்னிந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுடனும் ஷாரிக்கிற்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

Tags:    

Similar News