உள்ளூர் செய்திகள்

மேகதாது அணை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

Published On 2022-06-16 04:39 GMT   |   Update On 2022-06-16 05:24 GMT
  • மேகதாது திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
  • நாளை நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நாளை (17-ந்தேதி) டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று காவிரி மேலாண்மை வாரியம் சார்பில் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், மேகதாது திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவாஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், "மேகதாது விவகாரத்தை தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கிறது. தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதப்பட்டது. இதன் மூலம் தமிழக அரசு மீண்டும் காவிரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது. இதனை கர்நாடக அரசு எதிர்கொள்ளும்" என்றார்.

இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News