இந்தியா
டெல்லியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் செயலிழக்க செய்யப்பட்டது

பயங்கரவாத அமைப்பின் வெடிகுண்டு மிரட்டல் போலியானது - டெல்லி காவல்துறை விளக்கம்

Published On 2022-01-18 02:59 GMT   |   Update On 2022-01-18 02:59 GMT
பயங்கரவாத அமைப்பான அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கடிதம், விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சியாக இருக்கலாம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியின் காசிபூர்பகுதியில் உள்ள மலர் சந்தையில் வெடிபொருள் இருந்த  ஒரு பை மீட்கப்பட்டது. உடனடியாக  அந்த பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு  அந்தவெடி பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டது.   

ஒரு அதிநவீன சாதனத்துடன் இணைக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ் மற்றும் அம்மோனியா நைட்ரேட் கலவையுடன் அந்த வெடி பொருள் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வெடிகுண்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார், இந்த முயற்சிக்கு காரணமான பயங்கரவாத அமைப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே,  அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானது. டெல்லி வெடி குண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாகவும். சில தொழில்நுட்பப் பிழை காரணமாக வெடிபொருள் சாதனம் வெடிக்கவில்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இது குறித்து பேசிய டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி, சமூக ஊடக கண்காணிப்பின் போது, ​​தாக்குதல் முயற்சிக்கு பொறுப்பேற்று அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த் ஒரு கடிதத்தை கண்டோம். இந்த குழு ஒப்பீட்டளவில் ஒரு புதிய அணியாகும். இதுவரை அந்த குறிப்பிற்கான உண்மையான ஆதாரம் எங்களால் கண்டறியப்படவில்லை. என்றார். 

சமூக ஊடகங்களில் பரவி வரும் கடிதம், விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் கஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல்கள் போலியானவை என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News