இந்தியா
சாமியார் காளிச்சரணை மகாராஷ்டிர போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் - அமைச்சர் தகவல்
சாமியார் காளிச்சரண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனறு மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே தெரிவித்தார்.
நாக்பூர்:
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்சரண், கடந்த 26-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற ஆன்மீக மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, மகாத்மா காந்தி குறித்து தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரை அடுத்து காளிச்சரண் மீது ராய்ப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோ அருகே இன்று அதிகாலையில் கைது செய்தனர்.
இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்திலும் சாமியார் காளிச்சரண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மகாராஷ்டிர போலீசார் காளிச்சரணை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே தெரிவித்தார். மேலும், காளிச்சரண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனறும் அவர் தெரிவித்தார்.
தேசத் தந்தைக்கு எதிராக தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தியது மிகப்பெரிய குற்றம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.