இந்தியா
நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
ஆட்சியை கைப்பற்றுவது குறித்தே இந்துத்துவவாதிகள் வாழ்நாள் முழுவதும் சிந்திப்பதாக ராகுல் காந்தி பேசினார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் பணவீக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:-
இந்து, இந்துத்துவவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையேயான போட்டியே நாட்டின் தற்போதைய அரசியல். இந்த இரண்டு வார்த்தைகளும் மாறுபட்ட அர்த்தத்தை கொண்டது. நான் இந்து, ஆனால் இந்துத்துவவாதி கிடையாது. மகாத்மா காந்தி இந்து, ஆனால் கோட்சே இந்துத்துவவாதி.
இந்தியா இந்துக்களின் நாடு. இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் அதிகாரத்தையே விரும்புகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் அவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். ஆட்சியை கைப்பற்றுவது குறித்தே இந்துத்துவவாதிகள் வாழ்நாள் முழுவதும் சிந்திக்கிறார்கள். அதிகாரத்தை தவிர அவர்கள் வேறு எதையும் விரும்புவதில்லை. அதை பெறுவதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள். அனைத்து மதங்களையும் மதித்து, யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லாதவரே இந்து. இந்துத்துவவாதிகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, இந்துக்களை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.