வங்கதேசத்தினர் 13 பேரை நாடு கடத்த நடவடிக்கை - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தகவல்
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள ரோகிங்கிய அகதிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது. எனவே அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதாவை சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக பிரமாண வாக்குமூலம் சமர்ப்பிக்க கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கேரள அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் ரோகிங்கிய அகதிகள் 12 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் எந்த தொடர்பும் கிடையாது. மேலும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 214 பேர் பல் வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
போதிய ஆவணம் இல்லாமல் இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 57 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளர். 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மேலும் கேரளாவில் அனுமதியில்லாமல் வெளிநாட்டினர் தங்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.