கார் விபத்தில் பலியான 2 மாடல் அழகிகள் மரணத்தில் மர்மம் - ஓட்டல் உரிமையாளரிடம் 7 மணி நேரம் விசாரணை
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அன்சி கபீர். இவரது தோழி அஞ்சனா சாஜன்.
மாடல் அழகிகளான அன்சி கபீரும், அஞ்சனா சாஜனும் மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் கடந்த வாரம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாடல் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் சாவில் மர்மம் இருப்பதாகவும், விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் புகார்கள் கிளம்பின.
மேலும் எர்ணாகுளத்தில் விருந்து நடந்த ஓட்டலில் மாடல் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா சாஜனுடன் சிலர் தகராறு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். மேலும் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் இருவரும் விருந்தில் பங்கேற்ற ஓட்டலுக்கும் சென்று அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அந்த ஓட்டலின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. இதுபற்றி எர்ணாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் கூறும்போது, ஓட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினோம், அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தோம். அதில் சந்தேகத்திற்கிடமான காட்சிகள் எதுவும் இல்லை, என்றார்.