செய்திகள்
தடுப்பூசி போடாதவர்கள் மாநகர பஸ்களில் பயணம் செய்ய முடியாது
தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் தான் மாநகர பஸ்களில் பயணம் செய்ய முடியும் என மும்பையை அடுத்த தானே மாநகராட்சி அறிவித்து உள்ளது.
தானே:
மகாராஷ்டிராவில் இந்த மாதத்திற்குள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் பொது மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறது. சந்திராப்பூரில் பொதுமக்கள் தடுப்பூசி போடும் வகையில், டி.வி., பிரிட்ஜ் பரிசு போன்ற கவர்ச்சித்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருள் வழங்கப்படாது என்ற கடுமையான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் தான் மாநகர பஸ்களில் பயணம் செய்ய முடியும் என மும்பையை அடுத்த தானே மாநகராட்சி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த மாநகராட்சியின் மேயர் நரேஷ் மாஸ்கே கூறுகையில், “நவம்பர் மாதத்திற்குள் 100 சதவீதம் தடுப்பூசி போடும் இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தடுப்பூசி போட்டவர்களின் பட்டியலுடன் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய தொடங்கி உள்ளோம். ஆய்வின் போது தடுப்பூசி போடாதவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
இதேபோல மாநகராட்சி பஸ்களில் பயணம் செய்ய தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது யுனிவர்சல் பாஸ் கட்டாயமாகும். சான்றிதழ், பாஸ் இல்லாதவர்கள் பஸ்களில் பயணம் செய்ய முடியாது. ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்கள் தானே மாநகராட்சி பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.
இதையும் படியுங்கள்... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அமித்ஷா