செய்திகள்
விரைவில் தனிக்கட்சி: பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரின் மீடியா ஆலோசகர் ரவீன் துக்ரல்
பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரிந்தர் சிங், பா.ஜனதா கட்சியில் இணைவார் என்ற செய்தி வெளியானது.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங், உள்கட்சி மோதல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனால் பா.ஜனதாவில் இணைவார் எனத் தகவல் வெளியானது.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவேன், பா.ஜனதாவில் இணையமாட்டேன் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் விரைவில் தனிக்கட்சி குறித்து அறிவிப்பேன் என அமரிந்தர் சிங்கின் மீடியா ஆலோசகர் ரவீன் துக்ரல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமரிந்தர் சிங்கின் மீடியா ஆலோசகர் ரவீன் துக்ரல் கூறுகையில் ‘‘நான் என்னுடைய சொந்த அரசியல் கட்சி அறிவிப்பை விரைவில் தெரிவிப்பேன். எனது கட்சி பஞ்சாப், பஞ்சாப் மாநில மக்கள், விவசாயிகள் நலனுக்கானதாக இருக்கும்.
என்னுடைய மக்கள், மாநிலத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வரையில் ஓய்வு கிடையாது. பஞ்சாப் மாநிலத்திற்கு அரசியல் நிலைத்தன்மை தேவை. உள் மற்றும் வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
விவசாயிகளின் போராட்டம் தீர்க்கப்பட்டால், 2022 தேர்தலில் பா.ஜனதாவுடன் இடம் பகிர்வு ஏற்பாடு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அகாலி குழுக்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்’’ என்றார்.