செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Published On 2021-06-20 09:41 GMT   |   Update On 2021-06-20 09:41 GMT
கொரோனா ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் படிப்படியாக குறைக்கப்பட்டது.

ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. பஸ், வாகன போக்குவரத்து இல்லாததால் கடந்த மாதம் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ், கார் லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

ஊரடங்கு தளர்வு, கொரோனா பரவல் கட்டுப்பாட்டால் ஊரடங்கு நேரத்தில் வரமுடியாத பக்தர்கள் தற்போது திருப்பதிக்கு வர தொடங்கியுள்ளனர். இதனால் திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 13,453 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.1.89 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. நேற்று 18,211 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 7,237 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.1.09 கோடி காணிக்கை வசூலானது. 

Tags:    

Similar News