செய்திகள்
ஏடிஎம் பயன்பாட்டிற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வைரலாகும் தகவல்
இந்தியாவில் ஏடிஎம் பயன்படுத்துவோர் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் உடல்நலன் மட்டுமின்றி அனைவரும் சிக்கனமாக செலவிட துவங்கி உள்ளனர். தற்போதைய காலக்கட்டத்தில் யாரும் அரசாங்கத்திற்கு கூடுதல் வரியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ செலுத்த தயாராக இல்லை.
இந்த நிலையில், இன்று (ஜூன் 1) முதல் ஏடிஎம்-களில் நான்கு முறைக்கும் மேல் பரிமாற்றம் செய்வோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 173 வசூலிக்கப்படும் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ரூ. 150 வரி மற்றும் அதற்கான சேவை கட்டணம் ரூ. 23 ஆகும்.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஏடிஎம் பரிமாற்றங்களுக்கு வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகபட்சம் ரூ. 20 மட்டுமே வசூலிக்க வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருக்கிறது.
சில தனியார் வங்கிகள் மட்டும் மாதத்திற்குள் நான்கு முறைக்கும் மேல் ஏடிஎம் பரிமாற்றங்களை செய்வோரிடம் இருந்து ரூ. 150 வவரை வசூலிக்கின்றன. இந்த விதிமுறையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த கட்டணமும் மூன்று பரிமாற்றங்களுக்கு பின்னரே வசூலிக்கப்படுகிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.