செய்திகள்
கேரள தங்க கடத்தல் வழக்கு- சந்தீப் நாயர், சரித்துக்கு ஜாமீன்
அந்நிய செலாவணி வழக்கு உள்ளதால் சந்தீப் நாயர், சரித் இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படமாட்டார்கள்.
எர்ணாகுளம்:
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி வந்த பார்சலை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அமலாக்கத் துறை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்க கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் சந்தீப் நாயர் மற்றும் சரித் ஆகியோருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. எனினும், அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு உள்ளதால், அவர்கள் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்படமாட்டார்கள்.