செய்திகள்
குஜராத்தில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்
குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க மருத்துவமனையில் போதிய இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 2-ம் அலை கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது மிகத்தீவிரமாக வைரஸ் தொற்று பரவி வருகிறது.
முதல் அலையின்போது மருத்துவமனையில் சிறப்பு கொரோனா மையம் அமைக்கப்பட்டு சிறப்பான வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வர, கொரோனா மையங்கள் அகற்றப்பட்டன. அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் வழக்கமான பணிக்கு மாற்றப்பட்டனர். லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம் என அரசு தெரிவித்தது.
தற்போது ஜெட் வேகத்தில் அதிகரிப்பதால் உடனடியாக கொரோனா மையத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆக்சிஜனும் போதுமான அளவிற்கு இருப்பு வைக்க முடியவில்லை.
இதற்கிடையில் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாமல் டாக்டர்கள் திண்டாடி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு அகமதாபாத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வெளியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து அந்த மருத்துமனையில் சூப்பிரென்டு ஜே.வி. மோடி கூறுகையில் ‘‘மெடிசிட் கேம்பசில் 2120 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது வரை 2008 கொரோனா நோயாளிகள் அனுமிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்குள் 45 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததை நாங்கள் கவனித்தோம்’’ என்றார்.
வரும் நாட்களில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் கடும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை எந்தவித பாதுகாப்பும் இன்றி திறந்த வெளியில் எரித்த சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.