செய்திகள்
பிரசார பொதுக்கூட்டம்

மேற்குவங்காளம்- அசாமில் 77 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்ந்தது

Published On 2021-03-25 11:23 GMT   |   Update On 2021-03-25 11:23 GMT
மேற்குவங்காளம் மற்றும் அசாமில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்ந்தது.

கொல்கத்தா:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் அசாம், மேற்கு வங்காளத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது.

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதில் 30 தொகுதிகளில் வருகிற 27-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது.

நேற்று இந்த தொகுதிகளில் தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திரமோடி மேற்குவங்காளத்தில் கந்தி பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

மம்தா பானர்ஜி, பங்குரா மாவட்டத்தில் உள்ள பிஸ்னுபூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. அதில் 47 தொகுதிகளுக்கு 27-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த 47 தொகுதிகளில் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

47 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த பகுதியிலும் நேற்று தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்தது. பிரதமர் மோடி நேற்று தாரங், லட்சுமிபூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

இரு மாநிலங்களிலும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகள் பதட்டம் நிறைந்தவை ஆகும். தீவிரவாதிகள், சமூக விரோதிகள் அதிகம் பரவி உள்ள இடமாகும். எனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

77 தொகுதிகளிலும் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News