செய்திகள்
கோவில் பிரச்சனைகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது -கேரளாவில் அமித் ஷா பிரசாரம்
இடதுசாரி ஜனநாயக முன்னணி ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கங்கள் கேரளாவை ஊழலின் மையமாக ஆக்கிவிட்டதாக அமித் ஷா குற்றம்சாட்டினார்.
சாத்தனூர்:
கேரள மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு குறுகிய காலமே இருப்பதால் தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
சாத்தனூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கோவில்கள் தொடர்பான பிரச்சனைகளில் அரசாங்கங்கள் தலையிடக்கூடாது என்று பாஜக நம்புகிறது என்றார். கோவில் பிரச்சனைகளை பக்தர்கள் வசம் விட்டுவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
‘போலீஸ் சீருடை அணிந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் சபரிமலை பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.
கேரள மாநிலம் ஒரு காலத்தில் சுற்றுலா மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக கருதப்பட்டது. படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமாகவும், அமைதியை மிகவும் நேசிக்கும் மாநிலமாகவும் அறியப்பட்டது. ஆனால் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அரசாங்கங்கள் கேரளாவை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன’ என்றும் அமித் ஷா குற்றம்சாட்டினார்.