செய்திகள்
டுவிட்டர்

1178 பாகிஸ்தான்-காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவு

Published On 2021-02-08 04:09 GMT   |   Update On 2021-02-08 11:54 GMT
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைகளில் 75வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு கூறியிருப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை டுவிட்டர் நிறுவனம் அந்த வேண்டுகோளை முழுமையாக ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்திய நிலையில், நேற்று முன்தினம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 3 மணி நேரம் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் நடத்தினர். டெல்லி எல்லைகளில் அக்டோபர் 2ம் தேதி வரை போராட்டம் நீடிக்கும் என்று கூறி உள்ளனர். 
Tags:    

Similar News