செய்திகள்
பிரகாஷ் ஜவடேகர்

வதந்திகளை பரப்புவது பத்திரிகை சுதந்திரத்தின் ஒரு பகுதி அல்ல - பிரகாஷ் ஜவடேகர்

Published On 2021-02-07 12:50 GMT   |   Update On 2021-02-07 12:50 GMT
வதந்திகளை பரப்புவது பத்திரிகை சுதந்திரத்தின் ஒரு பகுதி அல்ல என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புனே: 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் சிலர் போலீசாரின் அனுமதியை மீறி அத்துமீறலில் ஈடுபட்டனர்.


போலீசார் அளித்த போராட்ட அனுமதிக்கான தடம் மற்றும் நேரம் ஆகியவற்றிற்கு பதிலாக விவசாயிகளில் சிலர் வேறு தடத்திலும், வேறு நேரத்திலும் டிராக்டர்களை கொண்டு தடுப்பான்களை முட்டி, மோதி உடைத்து முன்னேறி செங்கோட்டையை அடைந்தனர்.

இந்த சம்பவத்தில், வன்முறை கும்பலை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர். அத்துமீறியவர்களை தடுக்க தடியடி நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. அதன்பின், இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் செங்கோட்டையில் மத கொடி ஒன்று ஏற்றப்பட்டது.

டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது டிராக்டர் விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்தி பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வதந்திகளை பரப்புவது பத்திரிகை சுதந்திரத்தின் ஒரு பகுதி அல்ல என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக புனே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “நான் எப்போதும் பத்திரிகை சுதந்திரத்தை விரும்புகிறேன். எனினும் அப்பணியில் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு ஊடகத்தினர் செயல்பட வேண்டும். விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது குடியரசு தின வன்முறை குறித்து தவறாக வதந்தி பரப்பப்பட்டது. நான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருப்பதால் எப்போதும் ஊடக சுதந்திரத்தை விரும்புகிறேன். அந்த சுதந்திரத்தை ஊடகவியலாளர்கள் பொறுப்புணர்ச்சியுடன் பராமரிக்க வேண்டும்.

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது விபத்து காரணமாக ஒரு விவசாயி பலியானார். ஆனால் பிரபல நிருபர் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு காரணமாக விவசாயி இறந்துவிட்டதாக டுவீட் செய்திருந்தார். இதுதான் பத்திரிகை சுதந்திரமா? நாட்டில் வதந்திகளைப் பரப்புவது பத்திரிகை சுதந்திரத்தின் ஒரு பகுதி அல்ல. அரசாங்கத்தை யாரேனும் விமர்சித்தால் நாங்கள் அவர்களை ஒருபோதும் எதிர்க்கமாட்டோம். நாங்கள் அதை வரவேற்கிறோம். உண்மைகளை சரிபார்த்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 
Tags:    

Similar News