செய்திகள்
கேரள சட்டசபையில் விவாதம்

கேரள சபாநாயகருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள்

Published On 2021-01-21 08:47 GMT   |   Update On 2021-01-21 08:47 GMT
கேரள மாநிலத்தில் சபாநாயகரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  எம்எல்ஏ உமர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன்பின்னர் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பாஜக எம்எல்ஏ ராஜகோபால் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர்.

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பதால், விவாதத்தின்போது துணை சபாநாயகர் அவையை வழிநடத்தினார். சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், துணை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து விவாதத்தை கவனித்தார். 

விவாதத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ எஸ்.சர்மா பேசுகையில், ‘ஊடகங்களில் வெளியான யூகமான தகவல்களின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் உள்ளதால், தீர்மானம் மீது விவாதம் நடத்தக் கூடாது’ என வாதிட்டார்.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த 164 அறிக்கைகள் நீதிமன்றத்தில் உள்ளன. இன்னும் வெளிவரவில்லை. விசாரணை அமைப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்தது. அத்தகைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த 164 அறிக்கைகளை எவ்வாறு நம்பலாம்? என முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பினார்.

விசாரணை அமைப்புகள் வேண்டுமென்றே சபாநாயகரை மோசமாக சித்தரிக்க முயற்சிக்கின்றன. இந்த நடைமுறை தவறானது. அதை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளின் செயல் துரதிர்ஷ்டவசமானது என்றும் முதல்வர் தெரிவித்தார். 
Tags:    

Similar News