செய்திகள்
கோப்புப்படம்

மத்தியபிரதேசத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக நடந்த 4 பேர் கைது

Published On 2021-01-11 19:22 GMT   |   Update On 2021-01-11 19:22 GMT
மத்தியபிரதேச மாநிலத்தில் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக நடந்துகொண்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போபால்:

மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தின் ஹார்டி கிராமத்தின் அருகே மலைப்பகுதியில் தனியாக உள்ள ஒரு குடிசையில் 45 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார்.

கணவரை இழந்த அவருடன், 16, 18 வயதாகும் 2 மகன்கள், ஒரு சகோதரியும் வசிக்கின்றனர். தனது குடிசையிலேயே ஒரு சிறிய கடையையும் அப்பெண் நடத்திவருகிறார்.

கடந்த சனிக்கிழமை இரவு அங்கு சென்ற 4 பேர், அந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். அவர் இல்லை என்று கூறியபோது வலுக்கட்டாயமாக குடிசைக்குள் புகுந்த அவர்கள், அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அவரது அந்தரங்க உறுப்பில் ஒரு இரும்புக்கம்பியை செருகிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சம்பவத்தின்போது அந்த பெண்ணின் இரு மகன்களும் அங்கில்லை. உடனிருந்த சகோதரியால் 4 பேரையும் தடுக்க முடியவில்லை.

கூட்டு பாலியல் பலாத்காரம், கொடூர வன்முறைக்கு உள்ளான பெண், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கினார்.

அப்பெண்ணை அவரது சகோதரி, உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக சிதி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள ரேவா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மலைப்பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

மத்தியபிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மாநில உள்ளாட்சித்துறை மந்திரி ரோத்தம் மிஸ்ரா, இது குறித்து விரைந்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News