செய்திகள்
தகன மேடை

தகன மேடையின் மேற்கூரை இடிந்து விபத்து : பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு - நகராட்சி அதிகாரிகள் 3 பேர் கைது

Published On 2021-01-05 00:48 GMT   |   Update On 2021-01-05 00:48 GMT
உயிரிழந்தோரின் உடல் தகனம் செய்யும் இடத்தில் உள்ள கூடாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட முராட்நகருக்கு அருகே உள்ள உக்லார்சி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் இறந்த முதியவரின் உடல் தகன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பலத்த மழை பெய்ததால் அங்கிருந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் பலியானார்கள். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் நேற்று இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே தரமில்லாத கட்டிடத்தை கட்ட அனுமதி அளித்ததாக நகராட்சி அதிகாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கட்டிட ஒப்பந்ததாரரை தேடி வருகிறார்கள். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News