செய்திகள்
சுப்ரமணியம் சுவாமி

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமி சாடல்

Published On 2021-01-02 10:54 GMT   |   Update On 2021-01-02 10:54 GMT
அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி இங்கிலாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூலக்கூறுகளை கொண்டு அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. 

கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி பரிசோதனையில் நல்ல பயன் அளித்ததாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்தது.

மேலும், தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பித்தது. 

இந்த விண்ணப்பம் தொடர்பாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் நிபுணர் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை வழங்கியது. 

இந்த பரிந்துரையையடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அல்லது நாளை அனுமதி அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதற்கிடையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் நம்பகத்தன்மை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள போது அந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு தற்போதுவரை பரிந்துரை அளிக்கவில்லை.

இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு தற்போதுவரை பரிந்துரை அளிக்காத நிலையில் அந்த தடுப்பூசியின் மூலக்கூறுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோவிஷீல்டு தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக-வை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமாக சுப்ரமணியம் சுவாமி தடுப்பூசி தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கூட உலக சுகாதார அமைப்பு தற்போதுவரை பரிந்துரைக்கவில்லை. இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா?’ என தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News