செய்திகள்
விஜய் மல்லையாவிடமிருந்து மேலும் ரூ. 14.36 கோடி சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி
பிரான்ஸ் நாட்டில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக உள்ள 14.36 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பல சொத்துக்கள் முடக்கப்பட்டு அமலாக்கத்துறையுடன் இணைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரான்சில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள் சிலவற்றை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.
அதன்படி, பிரான்ஸ் நாட்டில் விஜய்மல்லையாவுக்கு சொந்தமாக உள்ள 1.6 மில்லியன் யூரோ மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் இந்திய மதிப்பு 14 கோடியே 36 லட்சம் ரூபாய் ஆகும்.
கடன் ஏய்ப்பு விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.