செய்திகள்
இன்று கரை கடக்கிறது நிவர் புயல்... ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் ரெட் அலர்ட்
நிவர் புயல் இன்று இரவு கரையை கடந்தபின்னர் நிலப்பரப்பில் பயணிக்கும் பகுதிகளின் அடிப்படையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெறும் நிவர், இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசுவதுடன், தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சில பகுதிகளுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராயலசீமா மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்கள், தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் தமிழகத்தில் கரைகடந்த பின்னர் நிலப்பரப்பில் பயணிக்கும் பகுதிகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.